ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை பெரு வீழ்ச்சி! கடந்த 24 மணிநேரத்தில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 347 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரத்தின் பின் ஏற்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையாக இது நோக்கப்படுகின்றது. அதேவேளை 45 இறப்புகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஏப்ரல் 24 அன்று, அதிக உயர்வாக 640 காணப்பட்டது. பின்னர் குறைவடைந்து நேற்று 525 ஆக உயர்ந்திருந்தது. எனினும் இன்றைய வீழ்ச்சி மருத்துவ உலகுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கின்றது.
ஒன்ராறியோ கோவிட் 19 என்ற கிருமித் தொற்றின் உச்சத்தில் இருந்து இறங்கத் தொடங்கியுள்ளது என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடந்து இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை "சீரான" வீழ்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் பிறகே தொற்றுர் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, வணிக நிறுவனங்களைத் திறப்பது தொடர்பாக சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முதன்மையான பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளைத் திறப்பதுடன், தொற்றுத் தொடர்பாக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவல்ல பணியிடங்களை மீண்டும் திறக்க முனைகின்றோம் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
நாளாந்த நோயாளர் எண்ணிக்கையின் வீழ்ச்சி, தற்செயலானதாகவும் இருக்கலாம். நமது கணிப்பிலும் தவறுகள் இருக்கலாம். இதனுடைய தொடர் வீழ்ச்சியை உற்று அவதானித்த பின்னரே நாம் தொற்றுப் பரவல் பற்றிய தீர்க்கமான முடிவுக்கு வர முடியும் என சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் செவ்வாயன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மாகாணத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட 15,728 நோயாளர்களில் இதுவரை 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment