கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,393 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் மரணமானோரின் எண்ணிக்கை 2905 ஆக காணப்படுகின்றது.எனினும் தொற்றுக்குள்ளாவோரின் வேகம் குறைவடைந்து செல்வதாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் தெரீசா ராம் தெரிவித்தார்.
இதேவேளை கொறோனா நுண்மித் தொற்று அச்சம் காரணமாக உயிராபத்தான மாரடைப்பு போன்ற நோய் அறிகுறிகள் தென்படுகின்ற போதும், பாதிக்கப்படுவோர் மருத்துவமனைக்கு செல்ல அச்சுகின்ற நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், மருத்துவமனைகளில் கொறோனா நுண்மித் தொற்று அபாயம் இல்லை என்று தெரிவிக்கும் மருத்துவர்கள், மருத்துவமனையில் ஒருவருக்கு தொற்று அடையாளம் காணப்படும் நிலையில், முறைப்படியாக பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் பல்வேறு படிமங்களில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் நோர்த் யோர்க்
பொது மருத்துவமனையிலும், ரொறண்டோ சிக் கிட்ஸ் மருத்துவமனையிலும் கொறோனா தொற்றுப் பரவல் ஏற்படட போதிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிக் கிட்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெற்ற பதின்ம வயதான ஒருவருக்கு கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
எனினும் மருத்துவமனையின் குறித்த பிரிவில்
சிகிச்சை பெற்ற ஏனைய சிறுவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் பெற்றோருக்கும், பராமரிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கும் வைரஸ் தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
அவ்வாறே, நோர்த் யோர்க் பொது மருத்துவமனையில் மூன்று நோயாளிகளுக்குக் கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது.
இதேவேளை, ஒன்றாரியோவில் கொறோனா நுண்மித் தொற்று காரணமாக இருதய சத்திரசிகிச்சைகள் இடம்பெறாதமையால் 35 பேர் மரணமானதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்ரீன் எலியட் கூறியுள்ளார்.
கொறோனா தொற்றைக் கையாண்ட நிலையில், எதிர்பாராத எண்ணிக்கையில் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் தேவைப்பட்ட ஐம்பத்திரெண்டாயிரம்(52,000) சத்திரசிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எனினும் குறுகிய காலத்திற்கே இவ்வாறு சத்திரசிகிச்சைகளை பிற்போட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இவை நீண்டகாலத்திற்கு பிற்போடப்படும் இடத்து பாதிப்புக்கள அதிகமாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment