சுவிற்சர்லாந்தில் இருந்து சென்ற மதபோதகரே யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 தொற்று பரவக் காரணமாக உள்ளார் என்று யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி குற்றம் சுமத்தியுள்ளார்.இதுவரை யாழ்ப்பணத்தில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாகவும், அனைவரும் அரியாலை உள்ளிட்ட இடங்களில் சுவிஸ் போதகரால் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள அவர், குறித்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தபட்ட நிலையிலேயே, அவர்கள் மீளவும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுமாறும் மருத்துவர் சத்தியமூர்த்தி நேற்றைய தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக் கொண்டார்.
அவ்வாறே, சுவிஸ் போதகர் இலங்கை சென்ற வேளையில் அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்த போதும், கட்டுநாயக்க விமானநிலையத்தில் பொய் கூறியே நாட்டுக்குள் நுழைந்ததாக, யாழ்ப்பாணத்தில் கொறொனா தொற்று கட்டுப்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட சமுதாய மருத்துவ அதிகாரி முரளி வல்லிபுரநாதன் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment