சர்வாதிகார ஆட்சி இலங்கையில் தொடர்வதால் தமிழர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கின்றனர் - ஹரி ஆனந்தசங்கரி
![]() |
| ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி |
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆந் திகதி, கிறீஸ்தவர்களின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றில் பங்குமக்கள் ஞாயிறு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு புனித செபஸ்ரியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றிலும், சில விடுதிகளிலும் இந்தக் கொடூரமான தாக்குதல்கள் இடம்பெற்றன. அவற்றில் இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் மரணமானதுடன் மேலும் பலரது வாழ்க்கை நிரந்தரமாகவே மாறிவிட்டது.
கோழைத்தனமான இந்த வன்முறைகளில் மரணமானவர்களை நாம் நினைவுகூரும் வேளையில், அர்த்தமற்ற இந்தச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இதயபூர்வமான ஆதரவைத் தெரிவிக்கிறேன். கோவிட்-19 உலகத் தொற்றுநோய் காரணமாகவும், இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதாலும், உயிர்த்த ஞாயிறு வழிபாடோ, நினைவேந்தலோ சாத்தியமற்றுள்ளமை கவலைக்குரியது.
இந்தத் தாக்குதல்களின் பின்னரான குறுகிய காலத்தில், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பலர் இலங்கை அரசால் முறையான வழிமுறைகள் பின்பற்றப்படாது கைது செய்யப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள் அல்லது பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் ஏராளமான மக்கள் வன்முறை, கண்காணிப்பு, அடக்குமுறை, அச்சம் ஆகியவற்றின் மத்தியில் வாழ்வதை நினைவுபடுத்துகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இலங்கை மீண்டும் சர்வாதிகார ஆட்சியின் திசையில் செல்வதை நாம் கடந்த ஆண்டில் கண்டோம். ஒக்ரோபரில் அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், புதிய அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1, 40/1 ஆகிய தீர்மானங்களை நிராகரித்தது; அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் அண்மையில் தடை விதிக்கப்பட்ட, போர்க் குற்றக் குற்றச்சாட்டுக்களைப் புரிந்தாரெனக் குற்றம் சுமத்தப்படும் ஷவேந்திர சில்வாவைப் பதவி உயர்த்தியது; அத்துடன் சிறுவர்கள் உட்பட்ட தமிழ்ப் பொதுமக்களைக் கொலை செய்த ஸ்ராஃப் சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவுக்கு மன்னிப்பு வழங்கியது.
குற்றம்புரிவோரைத் தண்டிக்காத வகையிலும், சர்வாதிகாரப் போக்கிலும் இலங்கை அரசு தொடர்ந்து பயணிப்பதால், தமிழர்களும், இலங்கைத் தீவில் உள்ள சிறுபான்மை மதத்தினரும் கொண்டிருக்கும் நம்பிக்கை குறைவடைகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரும் முழுமையான பொறுப்புக் கூறல் சாத்தியமாகாததுடன், நீண்டகால சமாதானம், மீளிணக்கம் ஆகியவற்றுக்கான சந்தர்ப்பமும் குறைவடைந்துள்ளது. போர்க் குற்றக் குற்றச்சாட்டுக்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கும் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு சர்வதேச சமூகம், அதனிடம் உள்ள அனைத்துப் பொறுப்புக் கூறல் வழிகளையும் ஒருதலைப்பட்சமாகவோ, பல்தேச அமைப்புக்களின் ஊடாகவோ செயற்படுத்தவேண்டும்.

This voice should be raised repeatedly in the Parliaments.
ReplyDelete