நோவா ஷ்கோஷ்யாவின் வடக்கில் இருந்து ஹலிஃபக்ஸ்க்கு அருகில் உள்ள Portapique இல் இருந்து 100 கிலோமீற்றர் வரையான Enfield வரை, கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிறு நண்பகல்வரை இடம்பெற்ற பல சம்பவங்களில் 51 அகவையுடைய கேப்றியல் வோர்ட்மன் (Gabriel Wortman) என்பவர் ஆர்சீஎம்பி பெண் அதிகாரி ஒருவர் உட்படப் 22 பேரைச் சுட்டுக் கொன்றாரென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பின்னர், அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனேடிய வரலாற்றில் மிக அதிகமானவர்கள் துப்பாக்கியால் கொல்லப்பட்ட சம்பவமாக இது அமைகிறது.
இதற்கு முன்னதாக, 1989 ஆம் ஆண்டு மொன்றியோல் இகோல் பொலிதெக்னீக்கில் துப்பாக்கி நபர் ஒருவர் 14 பெண்களைச் சுட்டுக் கொன்றமையே கனடாவில் இதுவரை மிகப் பெரும் எண்ணிக்கையானோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமாக அமைந்திருந்தது.
நோவா ஷ்கோஷ்யா சம்பவம் தொடர்பில் ஆர்சீஎம் மேற்கொண்டுவரும் விசாரணையில், துப்பாக்கிதாரி வோர்ட்மன் பயன்படுத்திய துப்பாக்கி சட்டவிரோதமானது என்றும், அதற்கான முறைப்படியான சட்டபூர்வமான உரிமத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிதாரி ஆர்சீஎம்யினர் பயன்படுத்தும் வாகனம் போன்றதொரு காரை வர்ணம் தீட்டியிருந்ததுடன், ஆர்சீஎம்யினரின் சீருடை போன்ற ஆடையையும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில், தீயில் எரிந்த ஐந்து வீடுகள் உட்படப் 16 இடங்களில் குற்றங்கள் புரியப்பட்டதாகவும், மேலும் உடலங்கள் மீட்கப்படக் கூடுமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொலையாளி உட்பட மரணமானோரின் எண்ணிக்கை 23 என்று அறிவிக்கப்பட்டது. பதினேழு அகவையுடைய பெண் ஒருவரும், அவரது பெற்றோரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது.
![]() |
| Pic from CBC Nova Scotia |



Comments
Post a Comment