இலங்கை தொழிலாளர் கொங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று தனது 55-வது அகவையில் தலங்கமா மருத்துவமனையில் காலமானார்.
மாரடைப்பு ஏற்பட்ட வேளையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இன்று பகல் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் Gopal Baglay
ஐ கொழும்பில் சந்தித்து மலையக மக்களுக்கான பத்தாயிரம் வீட்டுத் திட்டம் பற்றி உரையாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அரசுத் தலைவர் கோட்டபாயவுடனும் சந்திப்பு நிறைவு செய்து, வீடு திரும்பும் வழியிலேயே அவர் சுகவீனமுற்றதாக தெரியவருகிறது.
சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை துணிகரமாக தீர்க்கக் கூடிய அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த அவர், கோட்டபாய ராஜபக்சவுக்கு கடந்த தேர்தலில் ஆதரவை வழங்கினார்.
தொடர்ந்து கோட்டபாய ராஜபக்சவின் அரசில், தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
காலம் சென்ற ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் கொங்கிரசின் முன்னாள் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமாவார்.
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.
1990ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் கொங்கிரஸினூடாக அரசியலுக்குள் பிரவேசித்த அவர், 1993ஆம் ஆண்டு அக்கட்சியின் நிதிச் செயலாளராகவும், பின்னர் 1994 இல் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து போட்டியிட்ட அவர், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
தொடர்ந்து வந்த அரசாங்கங்களில், பல அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்துள்ளார்.


Comments
Post a Comment