தொற்று எண்ணிக்கையில் வீழ்ச்சி - ஒன்ராறியோ மீள்கின்றதா?

கடந்த ஒரு மாதத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இன்று 346 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ம் திகதி பதிவான 306 என்ற எண்ணிக்கையை அடுத்து இதுவே குறைவான எண்ணிக்கையாகக் கொணப்படுகின்றது. இந்த அதிகரிப்பைத் தொடந்து ஒன்ராறியோவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20000த்தை அண்மித்துள்ளது (19,944).
கடந்த 24 மணிநேரத்தில் 59 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஒன்றாரியோவின் மொத்த இறப்பு 1,599 ஆக உயர்ந்துள்ளது.
நாளாந்த அதிகரிப்பு வீதம் குறைவடையும் அதே நேரத்தில் இறப்பு வீதம் அதிகரித்துச் செல்வதாகக் கூறப்படுகின்றது. ஏற்கனவே அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களே இறப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவமனைகளில் 1,016 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொகையும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய நாள் சாதனையளவாக 19,277 பேர் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டனர். இது ஒரேநாளில் 3000மாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று வெளியாகியிருந்த 477 என்ற எண்ணிக்கை சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததாகத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்திருந்தார். மேற்கொள்ளப்பட்ட தடுப்புப் பணிகள் குறித்த ஐயமும் எழுந்ததாகக் கூறியிருந்தார்.
“நாங்கள் தொடர்ந்து போராட வேண்டும். நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்தக் கடினமான காலங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும். என்னை நம்புங்கள், இந்த இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் ஒர் ஒளி தெரிகின்றது” என்று மாகாண முதல்வர் டக் போர்ட் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
Comments
Post a Comment