சேவை வெட்டுகளுக்குத் தயாராகும் நகாராட்சிகள்: உதவத் தயங்கும் மத்திய, மாகாண அரசுகள்.
தொற்று நோய் தொடர்பான அவசரச் செயற்பாடுகளையடுத்து பல மாநகராட்சிகள் பெரு வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து மக்களுக்கான சேவைகளை வழங்கி வருவதில் அவை பெருஞ் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன. இவை தொடர்பாக மத்திய மாகாணஅரசுகளுக்கு அவசர உதவி கோரி கோரிக்கைகள் விடப்பட்ட போதும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் மாநகராட்சி முதல்வர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவின் பெரிய நகர மேயர்களின் கூட்டமைப்புத் தவைவரான கல்ப் (Guelph) மாநகர முதல்வர் Com Guthrie (கம் குத்ரி) கருத்துக கூறுகையில், எமது பற்றக்குறையை நிவர்த்தி செய்ய எம்மால் முடியவில்லை. ஒன்ராறியோ முழுவதும் உள்ள நகராட்சிகள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. அரசாங்கத்தின் இரு மட்டங்களிலிருந்தும் நிதியுதவி பெற வாய்ப்புகள் இல்லையென்றால் பணியாளர்களைக் குறைப்பது குறித்தும் சேவை வெட்டுகளைச் செய்வதைப் பற்றியும் சிந்திக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சேவை தொடர்பாக ஏப்பிரல் முதல் யூன் வரை 415 மில்லியன் டொலர் வருவாய் இழப்பு கணிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்புகளை ஈடுகட்டும் வகையில் மத்திய மாகாண அரசுகள் சாதகமாகச் சிந்தித்தாலும் பேச்சுவார்த்தைகள் இழுபட்டு தீர்வை நெருங்க நீண்டகாலமாகும். நாங்கள் மத்திய மாகாண அரசுகளின் சிக்கல்களுக்கிடையே சிக்கியிருக்கின்றோம்.
கடந்த வாரம், ரொரண்ரோ முதல்வர் ஜோன் டோரி, தமது நகராட்சிக்கு நிவாரணம் கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். எந்தவொரு உதவியும் வழங்கப்படாவிட்டால், நகரத்தின் சேவைகளைக் குறைத்து 19,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

Comments
Post a Comment