Skip to main content

கனடாவில் படைத்துறைப் பயன்பாட்டு ஆயுதங்கள் மீது தடை விதிப்பதாக அறிவிப்பு!

கனடாவில் ஆயுத வன்முறையைக் கட்டுப்படுத்தும் வண்ணம், படைத்துறைப் பயன்பாட்டு AR-15 இரக தாக்குதல் துப்பாக்கிகள்(Assault-Style Weapons)  மீது உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கனடியப் படைத்துறைப் பயன்பாடு தவிர்ந்து, ஏனையோர் 1500 வகையான படைத்துறைப் பயன்பாட்டு இரக ஆயுதங்கள், அவற்றை ஒத்த வடிவமைப்பான துப்பாக்கிகளின் பயன்பாடு, கொள்வனவு, விற்பனை, இறக்குமதி, கொண்டு செல்லல் ஆகியன உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிகள் தொடர்புபட்ட வன்முறையான குற்றங்கள் கனடாவின் அனைத்துப் பகுதிகளிலும் சமூகங்கள் மீதும், இந்தக் குற்றங்களால் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மீதும் பேரழிவான பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் ரூடோ, கடந்த 18ம், 19ம் நாட்களில் நோவா ஷ்கோஷியாவில் இடம்பெற்ற தாக்குதல்ச் சம்பவத்தில் ஒரு ஆர்சீஎம் உத்தியோகத்தர் உட்பட 22 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே மொன்றியோலின் இகோல் பொலிதெக்னீக்கில்( (École Polytechnique de Montréal) 1989 ஆம் ஆண்டு 14 பெண்களைச் சுட்டுக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய பிரதமர், இச்சம்பவங்கள் கனடிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கக் கூடாது என்று தெரிவித்தார்

இந்த இரண்டு சம்பவங்களின் போதும் குறிப்பிட்ட வகையான படைத்துறை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த வகையான ஆயுதங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையி;ல் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் சட்டபடி உரிமை பெற்ற தற்போதைய உரிமையாளர்கள் அவற்றைத் தொடர்ந்தும் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் அவற்றைக் கொண்டு செல்லவோ, வேறு ஆட்களிடம் ஒப்படைக்கவோ அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நடவடிக்கைகள் படைத்துறைப் பயன்பாட்டுக்கென வரையறை செய்யப்பட்ட ஆபத்தான துப்பாக்கிகள் அனைத்தையும் சமூகங்களில் இருந்து அகற்றுவதுடன், கனேடிய குடும்பங்களும், சமூகங்களும் துப்பாக்கி வன்முறையால் துன்பப்படாதிருப்பதை உறுதி செய்யவும் உதவியளிக்கும்.

புதிதாகத் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளின் உரிமையாளர்கள் புதிய விதிகளுக்கு அமைவாகச் செயற்படும் வேளையில், குற்றவியல் ரீதியில் பொறுப்புக் கூறுவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இரண்டு வருட நிலைமாறு காலம் நடைமுறைப்படுத்தப்படும்.

குற்றவியல் சட்டத்தின் கீழான இந்த இரண்டு வருட மன்னிப்புக் காலம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆந் நாள் வரை நடைமுறையில் இருக்கும்.

வேட்டையாடுவதற்கான பூர்வகுடி உரிமையை அல்லது ஒப்பந்த உரிமையை நிலைநிறுத்தும் பூர்வகுடியினருக்கும், தமக்கும் தமது குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்துக்காக வேட்டையாடுவோருக்கும் விலங்குகளைப் பொறி வைத்துப் பிடிப்போருக்கும் இந்தப் பொது மன்னிப்பின் கீழ் விதிவிலக்குகள் உள்ளன.

பொருத்தமான மாற்று ஏற்பாடுகள் முடிவு செய்யப்படும்வரை, புதிதாகத் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதற்கு இந்த விதிவிலக்குகள் அனுமதியளிக்கின்றன.

பொது மன்னிப்புக் காலம் நிறைவுக்கு வரும்போது துப்பாக்கிகளின் உரிமையாளர்கள் அனைவரும் தடைக்கு அமைவாக நடந்துகொள்ளவேண்டும்.

இந்த நடைமுறையானது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மக்களது கருத்தை அறிந்தும், இந்தத் துப்பாக்கிகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கு அவற்றை மீளக் கொள்வனவு செய்யும் திட்டம் ஒன்றை இயலுமான விரைவில் நடைமுறைப்படுத்துவதும், உரிய சட்டமூலத்தை விரைவாக அறிமுகம் செய்வதும் கனேடிய அரசின் நோக்கங்களாக உள்ளன என்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் குறிப்பிட்டார்.

பின்வரும் இரகத்தை ஒத்த வகையான துப்பாக்கிகள் மீதே தடைவிதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • M16, AR-10, AR-15 rifles and M4 carbine
  • Ruger Mini-14 rifle
  • US Rifle M14
  • Vz58 rifle and CZ858 rifle
  • Robinson Armament XCR rifle
  • CZ Scorpion EVO 3 carbine and pistol
  • Beretta Cx4 Storm carbine
  • SIG Sauer SIG MCX and SIG Sauer SIG MPX carbines and pistols
  • Swiss Arms Classic Green and Four Seasons series rifles
கனடிய அரசின் இன்றைய அறிவிப்பின் பிரகாரம் குறித்த 1500 வகையான துப்பாக்கிகளின் முழுமையான பட்டியலைப் பெற பின்வரும் இணைப்புக்கு செல்லவும். 1,500 types of 'assault-style' firearms

கடந்த ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தல் பரப்புரையின்போது படைத்துறைப் பயன்பாட்டு ஆயுதத் தடை குறித்து லிபரல் கட்சியின் பரப்புரையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, லிபரல் அரசின் ஆயுதப் பயன்பாட்டுத் தடை குறித்த அறிவிப்பு தவறானது என்று குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்றூ ஷியர், நோவா ஷ்கோஷியாவில் இடம்பெற்ற சம்பவத்தில் போது, சட்டவிரோதமான ஆயுதமே பயன்படுத்தப்பட்டிருந்தாக தெரிவித்தார்.

முறைப்படியான நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றாத நிலையில், லிபரல் அரசு தனது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த இந்த கோவிட்-19 தொற்று நோய் குறித்த இடர்கால நிலையைப் பயன்படுத்துவதாக ஷியர் குற்றம் சுமத்தியுள்ளார்.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.