ஒன்டாரியோ மாகாண பள்ளிக்கூடங்கள் எஞ்சியுள்ள இக்கல்வியாண்டு(2019-2020) முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன், கொறோனா தொற்றில் இருந்து அவர்களை பாதுகாத்தல் உள்ளிட்ட காரணங்களை முதன்மையாகக் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக சற்று முன்னர் சட்டசபை வளாகத்தில் மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மாகாண அரசால் முன்னெடுக்கப்பட்ட அவசரகால நிலையை அடுத்து மார்ச் இரண்டாம் வாரம் முதல், அரச நிதியின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் செயற்பாடு தொடர்பில் முதல்வர் டக் ஃபோர்ட்டும் மாகாண கல்வி அமைச்சர் ஸ்ரீஃபென் லெச்சோ இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
கொறோனா தொற்றுக் குறித்து சுகாதாரத் துறையினருடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு அமைவாக எஞ்சியுள்ள இக்கல்வியாண்டு வரை பள்ளிக்கூடங்களை மூடுவது என்று முடிபு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மார்ச் பிறேக்கை உள்ளடக்கி மூன்று வாரங்கள் மூடப்படுமென ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னைய அறிவிப்பின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
எனினும் இணைய வழிக் கல்விச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்று கல்வியமைச்சர் லெச்சோ கூறினார்.
அடுத்த கல்வியாண்டுக்கான அறிவிப்பு ஜூன் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கூறிய அவர், இவ்வாண்டுக்கான மாணவர்களின் தேர்ச்சி நிலை அறிக்கைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Comments
Post a Comment