கோவிட்-19 தொற்றை கனடா நூறாவது நாளில் எதிர்கொள்ளும் நிலையில், ஓன்டாரியோவில் கொறோனா நுண்மித் தொற்றால் இன்று 44 பேர் உயிரிழந்தனர். அனைவரும் நீண்டகால மருத்துவ பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்த நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் என்று தெரிவருகின்றது. இந்நிலையில் பராமரிப்பு இல்லங்களில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முதியோரின் எண்ணிக்கை மொத்தம் 954 ஆக உயர்வடைந்தது.
ஓன்டாரியோவில் இன்று தொற்றுக்குள்ளான 434 பேருடன் மொத்தம் 17,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1308 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12,005 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்றயதினம் 511 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
இதேவேளை சமூக இடைவெளி தொடர்பான நடைமுறைகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் சாத்தியம் இல்லையென ரொறண்டோ நகர முதல்வர் ஜோன் ரோறி தெரிவித்துள்ளார்.
கொறோனா தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் ஒன்ராறியோ உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை மக்கள் பேணுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.
இதற்கமைய ரொறண்டோலின் பாதசாரிகள் அதிகளவில் நடமாடும் பத்து இடங்களில், நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் நகரசபையினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மேலும் 88 இடங்களில் அது தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நகர முதல்வர் குறிப்பிட்டார்.



Comments
Post a Comment