கனடாவில் கோவிட்-19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட குபெக்கில் இன்று பதிவான 120 தொற்றுக்களுடன் மொத்தமாக 54383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிந்திய 42 இழப்புக்களுடன் 5340 பேர் மரணித்துள்ளனர்.
ஒன்ராறியோவில் தொடர்ந்து கோவிட் 19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுப் பரவல் வீழ்ச்சியடைந்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் நாளாந்த தொற்று எண்ணிக்கையளவு குறைந்து வருகின்றது.
நேற்றைய தினம் ஒன்றாரியோ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட 25,278 பரிசோதனைகளில், 173 தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் கோவிட் 19 காரணமான 3 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
கடந்த ஐந்து நாள் சராசரித் தொற்று எண்ணிக்கை 185 ஆக உள்ளது. அதேவேளை நாளாந்தம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. நாளாந்தம் சராசரியாக 220 பேர் குணமடைகின்றனர்.
தற்சமயம் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 1455 ஆகும். இவ்வெண்ணிக்கை நாளாந்தம் குறைந்து வருவதாக மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்டின் எலியட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 32,917 ஆக உள்ளது. இதில் 28,004 குணமடைந்துள்ளனர். 2,603 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 78 சதவீதமான இறப்புக்கள் நீண்டகால மருத்துவ பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்துள்ளன.


Comments
Post a Comment