Skip to main content

பியர்சன் விமானநிலைய கட்டுப்பாட்டை மதிக்காத அன்றூ ஷியர்!

Pic Credit : TWITTER

ரொரண்ரோ பியர்சன் விமானநிலையத்தில் விமானத்தை சென்றடையும் வாயிற்கதவு அருகேயான காத்திருப்புப் பிரதேசத்தில், கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் அன்றூ ஷியர்(Andrew Scheer) முகக் கவசம் இன்றி அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், மெனிற்றோபா மாகாண முதல்வர் பிறயன் பெலிஸ்ரருடன்(Brian Pallister) பேசிக் கொண்டிருக்கின்றார்.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் ஜூன் 01ம் நாள் முதல் பியன்சன் விமானநிலைய நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறை ஒழுங்கின் பிரகாரம்,
விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளிப்புறமாக அந்த வளாகத்துள்ளும், வாகனத் தரிப்பிடங்களிலும் பணியாளர்கள் பிரயாணிகள் உட்பட அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



எனினும் இந்த விதிமுறையை மீறும் வண்ணம் கனடிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷியர், இன்று ஒடாவா பயணிக்கும் முன்னர் விமானநிலையத்தில் நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத் தளங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

ஆகவை இரண்டுக்கு உட்பட்டோர், சுயாதீனமாக இயங்க முடியாத நோயார்கள், சுவாசப் பிரச்சனையுடன் தொடர்புபட்ட நோயார்கள் தவிர்ந்த அனைவரும் முகக் கவசம் அணிவது பியர்சன் விமான நிலையத்துள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஷியரின் பேச்சாளர் பதிலளிக்கையில், அவர் செல்பேசியில் உரையாடிய வேளையில் அப்புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும் வெளியாகியுள்ள படத்தில் முக்கிய உரையாடலில் ஷியர் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும், அவரது கையில் செல்லிடப் பேசி காணப்படாமையும் தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.



இதேவேளை ரொரண்டோ, ஒடாவா நகரங்களில் இன்று முதல் பொதுப்போக்குவரத்திலும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களிலும், இரண்டு மீற்றர் இடைவெளி பேண முடியாத இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.