![]() |
| Pic Credit : TWITTER |
ரொரண்ரோ பியர்சன் விமானநிலையத்தில் விமானத்தை சென்றடையும் வாயிற்கதவு அருகேயான காத்திருப்புப் பிரதேசத்தில், கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் அன்றூ ஷியர்(Andrew Scheer) முகக் கவசம் இன்றி அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், மெனிற்றோபா மாகாண முதல்வர் பிறயன் பெலிஸ்ரருடன்(Brian Pallister) பேசிக் கொண்டிருக்கின்றார்.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் ஜூன் 01ம் நாள் முதல் பியன்சன் விமானநிலைய நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறை ஒழுங்கின் பிரகாரம்,
விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளிப்புறமாக அந்த வளாகத்துள்ளும், வாகனத் தரிப்பிடங்களிலும் பணியாளர்கள் பிரயாணிகள் உட்பட அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விதிமுறையை மீறும் வண்ணம் கனடிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷியர், இன்று ஒடாவா பயணிக்கும் முன்னர் விமானநிலையத்தில் நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத் தளங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
ஆகவை இரண்டுக்கு உட்பட்டோர், சுயாதீனமாக இயங்க முடியாத நோயார்கள், சுவாசப் பிரச்சனையுடன் தொடர்புபட்ட நோயார்கள் தவிர்ந்த அனைவரும் முகக் கவசம் அணிவது பியர்சன் விமான நிலையத்துள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஷியரின் பேச்சாளர் பதிலளிக்கையில், அவர் செல்பேசியில் உரையாடிய வேளையில் அப்புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும் வெளியாகியுள்ள படத்தில் முக்கிய உரையாடலில் ஷியர் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும், அவரது கையில் செல்லிடப் பேசி காணப்படாமையும் தெளிவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதேவேளை ரொரண்டோ, ஒடாவா நகரங்களில் இன்று முதல் பொதுப்போக்குவரத்திலும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களிலும், இரண்டு மீற்றர் இடைவெளி பேண முடியாத இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment