திரையரங்குகளை மீளத் திறப்பது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு சினிப்பிளக்ஸ்(Cineplex) நிர்வாகம் ஒன்ராறியோ அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கோவிட்-19 நுண்மித் தொற்று இறுக்க நிலையில் இருந்து வழமைக்குத் திரும்புதல் தொடர்பான 3ம் கட்டத்தின் போது திரையரங்குகளில் 50 பேர் மட்டும் உரிய பாதுகாப்பு விதிகளுடன் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
எனினும் பணியாளர்களின் ஊதியம் உட்பட அனைத்துச் செலவுகளையும் மேற்கொள்வதற்காக வருவாயை ஈட்டுவதற்கு 50 பேரை உள்ளடக்கிய நிலையில், திரையரங்குகளை இயக்குவதன் மூலம் ஈட்டும் வருமானம், இத்தொகையை சமாளிக்க போதுமானதல்ல என்று கனடியத் திரையரங்கச் சம்மேளனத் தலைமை அதிகாரி டன் மெக்ராத் (Dan McGrath) தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ மகாணத்தில் 35 இடங்களில் சினிப்பிளக்ஸ் திரையரங்குகள் மீளத் திறந்தபோதும் வருவாய் இழப்புடனேயே அவை இயங்குகின்றன.
கொறோனா நுண்மித் தொற்றுநோய் காரணமாக பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை 130 ஊழியர்களை சினிப்பிளக்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
திரையங்குகள் குறைந்த பட்ட இலாபத்துடனாவது இயங்க அனுமதிக்க வேண்டும் என்று டன் மெக்ராத் கேட்டுள்ளார். எனினும் ஒன்ராறியோ அரசு இந்தக் கோரிக்கைக்கு இதுவரை அரசு பதில் வழங்கவில்லை.
நோவா ஸ்கோஷியாவில் திரையரங்குகளில் உள்ள இருக்கைககளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சஸ்கற்றுவானில் இது 30 சதவீதமாக அனுமதிக்கப்படுகிறது.
இதேவேளை, கனடாவின் Cineplex நிறுவனத்தை பிரித்தானியாவைச் சேர்ந்த Cineworld Group PLC நிறுவனம் இவ்வாண்டின் ஆரம்பத்தில் 2.8 பில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்ய இருந்த போதும், பின்னர் இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

Comments
Post a Comment