2001 ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பிரித்தானிய அரசினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு மறுத்த பிரித்தானிய அரசின் செயல் தவாறனது என்று பிரித்தானியாவின் Proscribed Organizations Appeal Commission எனப்படும் அந்நாட்டின் நீதித்துறை ஆணையம் ஒன்று நேற்று அறிவித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானிய உள்துறை அலுவலகத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசு முன்வைத்த கோரிக்கையை, 2019 ஆம் மார்ச் 08ம் நாள் பிரித்தானிய அரசு நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து உள்துறை அலுவலகத்தின் இந்த முடிவுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு, பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தார்கள்.
விசாரணையை மேற்கொண்ட ஆணையம் பிரித்தானிய உள்துறைச் செயலாளரின் செயல் குறைபாடுடையதென நேற்று ஒக்டோபர் 21ம் நாள் வெளியிட்ட 38 பக்க தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆணையகத்தின் தீர்ப்புத் தொடர்பில் பதில் அளிக்க பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு 28 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்துறை அலுவலகம் தனது முடிபை மீள்பரிசீலனை செய்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மறுக்கும் பட்சத்தில், ஆணையகம் பிரித்தானிய நாடாளுமன்றம் ஊடாக தடையை நீக்க சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சட்டவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கக் கூடாது என்று இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் இந்த நடவடிக்கைகளுக்கான ஒரு தரப்பாக இலங்கை அரசாங்கம் இல்லாத காரணத்தினால், நேரடியான பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ள முடியவில்லையாயினும், தொடர்ச்சியாக இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் திறந்த தீர்ப்பானது மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் அதே வேளையில், மேலதிக விசாரணைகளுக்கும் சந்தர்ப்பங்களை வழங்குவதுடன், பிரிததானியாவில் இடம்பெறும் வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நெருக்கமான அவதானங்களை செலுத்தும் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2009 வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிரவாத நடவடிக்கை தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்டுவரும் செய்திகள் எவ்வித ஆதாரங்களும் அற்றது என்று நாடு கடந்த தமிழீழ அரசினால் மேன்முறையீடு செய்யப்பட்ட மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Comments
Post a Comment