ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 46,671 கோவிட்-19 நுண்மிப் பெருந்தொற்றுப் பரிசோதனைகளில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக 1588 நாளார்ந்த தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 21 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
கடந்த மார்ச் முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தொற்றுக்குறித்த பரிசோதனைகளில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய தொற்றுக்களாக இது காணப்படுகின்றது.
பீல்ப் பிராந்தியத்தில் 522 பேரும், ரொறன்ரோவில் 450 பேரும், 150 யோர்க் பிராந்தியத்தில் பேரும் இன்றைய நாளார்ந்த தொற்றுக்களுள் உள்ளடங்குகின்றனர்.
பிந்திய நாளார்ந்த தொற்றுக்களுடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 102,378 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 86,079 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் 3472 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் எதிர்வரும் திங்கட்கிழமை 23ம் முதல் ரொறன்ரோ, பீல்ப் பிராந்தியங்கள் முடக்க நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது.
ரொறன்ரோ நகரின் கொரோனா நிலைமைகள் பிழையான திசையில் நகர்வதாக தாம் கருதுவதாகவும் நோய்ப் பரம்பலை கட்டுப்படுத்த சில கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் நகர முதல்வர் ஜோன் ரோறி சுட்டிக்காட்டியுள்ளார்.
நகரில் கடுமையான சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நோய்வாய்ப்படுவது பொருளாதார பாதிப்புக்களை விடவும் ஆபத்தானது என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென ஜோன் ரோறி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரொறன்ரோ மற்றும் பீல் பிரதேசங்களில் உடல் பயிற்சி மையங்கள் உட்பட அத்தியாவசியமற்ற வணிக வளாகங்கள் அனைத்தையும்; மூட உத்தரவிட்டுள்ளது.
உணவகங்கள் உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்களுக்கு உள்ளேயும் வெளியமர்வுகளிலும் உணவு பரிமாறுவது தடை செய்யப்பட்டிருந்தாலும் உணவுப் பொதிகள் விற்பனையாவது தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.



Comments
Post a Comment