இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில். அகில இலங்கை மக்கள் கொங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்து இருந்தது. அதற்கமைவாகவே சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் கொங்கிரஸின் உறுப்பினராக கடந்த டிசம்பர் 08ம் நாளன்று அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று புதன்கிழமை முற்பகல் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் முன்னிலையில் சுதாமதி சத்தியப் பிரமாணம் செய்தார்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர் ஆகியோர்களும் கலந்து கொண்டார்.
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தை சேர்ந்த சுதாமதி அந்த பிரதேசத்தின் அபிவிருத்தி, கல்வி மேம்பாடு உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனத்தை செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேசம் முஸ்லிம், தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
நீண்ட காலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், இங்குள்ள தமிழர்களை கௌரவிக்கும் வகையில் பட்டியல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த சுதாமதியை பிரதேச சபையின் உறுப்பினராக நியமித்துள்ளமை மூலமாக தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான உறவு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, தமிழ் மக்களும் இந்த நியமனத்தை தங்களுக்குரிய கௌரவமாக கருதி இன உறவினை மேலும் பலப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.
தன்னுடைய பெயரை பட்டியல் வேட்பாளராக இணைத்துக் கொண்ட போதிலும், இவ்வாறு ஒரு கௌரவத்தை அகில இலங்கை மக்கள் கொங்கிரஸ{ம், தவிசாளரும், மத்திய குழுவும் வழங்கியமைக்கு என்றும் நன்றியுடையவளாகச் செயற்படுவேன் என்று சுதாமதி தெரிவித்தார்.




Comments
Post a Comment